Thursday, January 19, 2012

பாராளுமன்றத்தையும் ஆக்கிரமித்த Why This கொலைவெறி பாடல்


நடிகர் தனுஷின் Why This கொலை வெறி பாடலினால் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விவாதம் சுவாரஷ்யமாக இருந்ததுடன், சபையில் இருந்த இருதரப்பினரும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து Why This கொலை வெறி எனக் கேட்க எமக்கு No கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்த வேளையிலேயே சபையில் சிரிப்பொலி எழுந்தது.
ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தனதுரையில் தமிழ்நாட்டு காரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலை வெறி கொலை வெறி என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலை வெறி பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
இங்கோ! ஜே.வி.பி.யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலை வெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர். சுனில் ஹந்து நெத்தி எம்.பி.யே  Why This கொலை வெறி என அஸ்வர் எம்.பி. கேட்கையில் No கொலை வெறி No கொலை வெறி என சுனில் எம்.பி. தெரிவித்தார். இதன்போது அவையில் இருந்தவர்கள் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தனர். இதனால் விவாதம் சுவாரஷ்யமாக இருந்தது.
நேற்றைய விவாதத்தை தனதுரையில், சுவாரஷ்யப்படுத்திய அஸ்வர் எம்.பி.
ஜே.வி.பி.யை பார்த்து தனதுரையில் Why This கொலை வெறி, Why This கொலை வெறி எனக் கேட்க பதிலுக்கு ஜே.வி.பி.யினர் ஆளும் தரப்பை பார்த்து Why This கொலை வெறி, Why This கொலை வெறி எமக்கு No கொலை வெறி எமக்கு No கொலை வெறி எனக் கூறிக்கொண்டிருந்தனர்.
இதனிடையே அஸ்வர் எம்.பி.யை அடுத்து உரையாற்றிய யோகராஜன் எம்.பி. Why This கொலை வெறி பாடலை சரியாக புரிந்து கொள்ளாத அஸ்வர் எம்.பி. தவறான அர்த்தத்தை கற்பித்து கொலை வெறியை தூண்டும் வகையில் அர்த்தம் கற்பிக்கின்றார் என சுட்டிக்காட்டினார்.
Why This கொலை வெறி எனும் பாடலுக்கு நல்ல பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. எனினும் அஸ்வர் எம்.பி. தமிழகத்தவர்களுக்கு உள்ள கொலை வெறியில் தான் இந்தப் பாடல் பாடப்பட்டதாக கூறுகின்றார். இது தவறானது.
இந்நிலையில் அவைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த அஸ்வர் எம்.பி. குறுக்கிட்டு இல்லை, இல்லை அது சரியான அர்த்தமாகும். எம்மீது உள்ள கொலை வெறியில்தான் எம்மை பார்த்து இந்தப் பாடலை பாடியுள்ளனர் என்றார்.
இதனை மறுத்த யோகராஜன் எம்.பி. இல்லை. இந்தப்பாடலுக்கு நீங்கள் தான் தவறான அர்த்தத்தை கொடுக்க முற்படுகின்றீர்கள். அந்தப்பாடலோ வேறு அர்த்தத்திலேயே பாடப்பட்டுள்ளது.
தமிழகத்தவர்களுக்குள்ள கொலை வெறியில் தான் இந்தப் பாடல் பாடப்பட்டதாக நீங்கள் தான் கூறிக் கொண்டு இங்குள்ளவர்களுக்கு கொலை வெறியை தூண்டுவதற்கு முற்படுகின்றீர்கள். இது தவறானது என்பதனால் தயவு செய்து Why This கொலை வெறி எனும் பாடலுக்கு தவறான அர்த்தத்தை கற்பிக்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment