Friday, January 6, 2012

பிறந்து ஒரு நாளேயான சிசுவை கல்லுடன் கட்டி கிணற்றில் போட்டு தாய் தலைமறைவு: கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சி விசுவமடு பகுதியில், பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு தாயொருவர் தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளதாகவம் அவரது கணவர் இறுதிப்போரின் போது உயிரிழந்து விட்டார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி, மீளக்குடியமர்ந்த இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்னர் கருத்தரித்துள்ளார். நேற்று முன்தினம் முதல் இவரது வீட்டில் எவரும் இல்லாததால் சந்தேகப்பட்ட அயலவர்கள் அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதன் பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார் அந்தப் பகுதிக்கு சென்று நடத்திய சோதனைகளின் போது, குறித்த பெண்ணின் வீட்டுக் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.
போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு குறித்த சிசுவை தாய் கிணற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது ஏனைய 5 பிள்ளைகளுடன் சிசுவை கிணற்றில் வீசிய பெண் தலைமறைவாகி விட்டதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment