Friday, January 6, 2012

சரத் பொன்சேகாவை விடுவிக்க அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்து! சரத் பொன்சேகா வீரவன்சவின் கருத்துக்கு கடும் ஆட்சேபம்


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்துபவர்களே, அவர் உள்ளேயே இருக்கவேண்டும் என அதிகளவில் விரும்புகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 தனது கணவர் மீது அந்த அம்மையாருக்கு அவ்வளவு அக்கறையிருக்குமானால், கணவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே என்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் வழங்கிய செவ்வியில், சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
சரத் பொன்சேகா, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பாராயின் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் நானும் இடம்பெற்றிருப்பேன்.
எது எப்படியிருப்பினும், அந்த நபரை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். சரத் பொன்சேகா மீதுள்ள அன்பின் காரணமாக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருபவர்கள்தான் அவர் உள்ளே இருப்பதை அதிகளவில் விரும்புகின்றனர். விடுதலை செய்யுமாறு கோருவதெல்லாம் பொய் நாடகமாகும்.
அந்த அம்மையாருக்குத் தனது கணவர் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் கணவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கலாம்தானே? ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்திலேயே அவர் பொதுமன்னிப்புக் குறித்து பரிசீலிக்கலாம்.
எந்த ஒரு கைதியும் அவ்வாறு விடுதலையாவதற்கு ஆசைப்படுவார் அல்லவா? கைதிகளின் உறவுகள் ஜனாதிபதிக்குத் தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு கடிதம் எழுதுகின்றனர். அப்படியானால், அந்த அம்மையார் கோரிக்கை விடுக்காதிருப்பது ஏன்?
இரண்டாம் இணைப்பு
எனது கொலைப்பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இருக்கவில்லை – சரத் பொன்சேகா
எனது கொலைப் பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இருக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“பித்தளை பஞ்சாயுத விமல் வீரவன்ச, என்னை விடுதலை செய்ய எனது மனைவி மன்னிப்பு கோர வேண்டுமென தெரிவித்துள்ளார்” எனக்கு விருப்பமில்லாத ஒன்றை எனது மனைவி செய்ய மாட்டார்.
விமல் வீரவன்சவின் வீட்டில் எப்படியோ எனக்கு தெரியாது.
எனது கொலைப்பட்டியலில் விமல் வீரவன்சவின் பெயர் இடம்பெறவில்லை, சாரைப் பாம்புகளை அடித்து பாவத்தைத் தேடும் பழக்கம் எனக்கில்லை.
எனது கொலைப் பட்டியலில் விடுதலைப் புலித் தீவிரவாதிகளின் பெயர்கள் மட்டுமே இருந்தன.
சாரைப் பாம்புகளின் பெயர்கள் எனது கொலைப் பட்டியலில் இருக்கவில்லை என சரத் பொன்கோ தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment