Saturday, January 14, 2012

யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் விடுதலைப்புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சி: சிங்கள ஊடகம்

யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி குற்றம் சுமத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் அநேகமான துறைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு முதலீடு செய்து, அதன் மூலம் யாழ்ப்பாண வர்த்தகத்துறையில் ஆதிக்கத்தை செலுத்த  முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன், வர்த்தக முயற்சிகளின் மூலம் ஈட்டப்படும் இலாபம் புலிகளின் நிதிக்கட்டமைப்பைச் சென்றடைவதாகவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மிகப் பிரபலமான வர்த்தகர் ஒருவருக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு வழங்கி வருகின்றனர் என அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் இந்த வர்த்தகருக்கு 16 பார ஊர்திகளை புலிகள் வழங்கியுள்ளனர்.
ஐரோப்பிய வாழ் விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் இதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளனர் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு யாழ்ப்பாணம் பஸ்கள் பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விடுதலைப்புலிகள் ஆதரவளித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிரான கருத்துக்களை வெளியிடும் தொலைக்காட்சி அலைவரிசைகளும் யாழ்ப்பாணத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment