Friday, January 13, 2012

புலனாய்வாளர் என கூறிக்கொண்டு பல்கலைக்கழக மாணவனொருவனை அச்சுறுத்திய மர்மநபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு


ஈ.பி.டி.பி உறுப்பினர் எனவும் புலனாய்வாளர் எனவும் கூறிக்கொண்டு பல்கலைக்கழக மாணவனொருவனை அச்சுறுத்திய மர்மநபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. வியாழக்கிழமை மாலை யாழ்.நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவன் புதிய அண்டு மாணவியான தனது தங்கையின் செயற்றிட்டத்தை போட்டோ பிரதி பெறுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்துள்ளான்.
இதன் தலைப்பு யுத்தத்தின் பின்னரான சமகால சூழலில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எற்படுத்த அகிம்சையே ஒரே வழி என்பதே. இந்நிலையில் போட்டோ பிரதி எடுக்கும் இடத்திற்கு வந்த அந்த நபர் குறித்த செயற்றிட்டத்தை வாங்கிப் பார்த்துவிட்டு யார் நீ? ஏப்படி நீ எழுதலாம் என்றெல்லாம் அச்சுறுதியுள்ளார்.
இதற்கு குறித்த மாணவன் நீங்கள் யார்? என வினவியபோது தான் ஈ.பி.டி.பி எனவும் புலனாய்வாளர் எனவும் உன்னை சுடுவேன் எனவும் அச்சுறுத்தி குறித்த மாணவனது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அவனை அச்சுறுத்தியுள்ளான்.
இந்நிலையில் குறித்த மாணவன் நடந்த சம்பவத்தை மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளான். இதனயைடுத்து மாணவர் ஒன்றியம் விடயத்தை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களும் மக்களும் விடயத்தை பொலிஸாருக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் தெரியப்படுத்தினர். எனினும் உடனடியாகவே விசாரணைகளை மேற்கொண்ட ஈ.பி.டி.பி குறித்த நபர் ஜோன்சன் எனவும் அவருக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment