Tuesday, December 27, 2011

ஆழிப்பேரலை அனர்த்த நிகழ்வுகள் ஜேர்மனியிலும் அனுஷ்டிப்பு


ஆழிப்பேரலை மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக நேற்று முன்தினம் ஜேர்மனியின் ஆலன் நகரில், அந்நகர மதகுரு பெர்ன்ஹார்ட் ரிக்டர் (Bernhard Richter) தலைமையில் ஆலன் தமிழ் மற்றும் ஜேர்மனிய மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இலங்கையில் போரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் முகமாகவும் அந் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஜேர்மன் பெர்லின் நகரிலும் 27 .12 .2011 அன்று நடைபெற்ற தேவாலய ஒளி விழாவில் ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆலன் தமிழ் மக்கள் பல்லாண்டு காலமாக ஜேர்மனிய மக்களுடன் சமூக இணைவாக்கம் கருதி பல வேலைத்திட்டங்களை முன்மாதிரியாக முன்னெடுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அங்கு வருகை தந்திருந்த உள்ளூர் ஊடகத்திற்கு ஆலன் தமிழ் பாடசாலையின் அதிபர் திரு தனபாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை எடுத்துரைத்ததை தொடர்ந்து சுனாமி பேரழிவு காலத்தில் ஜேர்மனிய மக்கள் ஆற்றிய உதவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இறுதியாக 2009 ஆண்டு போர் முடிவடைந்தாலும் இன்று வரை இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புகளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை இன்று வரை பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களுக்கு போகவிடாமல் , மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
இயற்கை அழிவால் கொல்லப்பட்ட மக்களை மறவாமல் , சிறப்பாக ஜேர்மனிய மக்களையும் இணைத்து இவ் நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக முன்னெடுத்த ஆலன் நகர தமிழ் மக்களுக்கு, ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment