Friday, December 16, 2011

இந்து ஆலய வளாகத்தில் சிங்களவர் வெறியாட்டம்! 5 தமிழ் இளைஞர்கள் மீது வாள்வெட்டு! கேகாலையில் சம்பவம்


கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டியாந்தோட்டை, தோட்டப் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்று முன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.
போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டது.
கடும் கோபத்துடன் திரும்பிச்சென்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது கோஷ்டியினர் சகிதம் மீண்டும் ஆலய வளாகத்துக்குள் வந்து, தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாக வாளினால் வெட்டித் தாக்கியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியால் வீட்டுக்குள்ளேயே உறைந்துப்போயுள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அசுரவேகத்தில் செயற்பட்ட மனோ, அப்பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
எட்டியாந்தோட்டை பிரதேச பிரஸ்தாப தோட்டத்திற்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸார் மனோவிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன், இச்சம்பவத்தை மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார். 

No comments:

Post a Comment