Friday, March 9, 2012

வன்னியில் பறக்கும் படை; சட்டவிரோத மின் பாவனையாளர்களைப் பிடிப்பதற்கு

news
 வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத மின்பாவனையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
 
 
கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட குழுவினரும் வவுனியா மின்சார சபையினரும் இணைந்தே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செட்டிகுளம், பூந்தோட்டம், கூமாங்குளம், உக்குளாங்குளம், நெளுக்குளம், பண்டாரிகாடு ஆகிய பகுதிகளில் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமான மின் பாவனையில் ஈடுபட்ட பலர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன்னால் மக்கள் குழுமி நின்றதை அவதானிக்க முடிந்தது.
 
சட்டவிரோத மின்பாவனையாளரிடம் தண்டமாகப் பெரும் தொகை அறவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை, இரவு, மதியம் என்ற காலவேறுபாடு இல்லாது, தீவிர சோதனையில் ஈடுபடும் இந்தக் குழுவினர் வாயிற் கதவு பூட்டியிருந்தாலும், வேலியூடாகப் புகுந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதேவேளை இந்தக் குழுவினர் தற்போது மீள்குடியமர்வு இடம்பெற்ற மின் இணைப்பு வழங்கப்படாத பகுதிகளான ஓமந்தை, வேலங்குளம் ஆகிய பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  
 
மின்சார சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதற்கு பல பகுதிகளில் வலுக் குறைந்த மின் சாரமே விநியோகிக்கப்படுவதற்கும் சட்டவிரோத மின் பாவனையாளர்களே காரணம் என்று கூறப்படுகின்றது. எனவே இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவோரை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக நாடெங்கும் விசேட பறக்கும் படைகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment